எடப்பாடி போட்ட பிச்சையில் வாழ்ந்துட்டு.. உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்வதா..? அதிமுக தலைமை காட்டம்..!!

By Swetha on வைகாசி 13, 2026

Spread the love

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் தற்போது சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆதரவோடு ஆட்சியமைக்க விரும்பியதாகக் கூறப்படும் தகவல்களை சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஊடகங்களில் முன்வைத்த நிலையில், அதற்கு அதிமுக தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், சொந்த மாவட்டத்தில் வெற்றி பெறத் துப்பில்லாதவர்கள் எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாகக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையில் வெற்றி பெற்றுவிட்டு, இன்று பதவிக்காக த.வெ.க-விடம் மண்டியிட்டுக் கிடப்பதாகவும், உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் ஈனத்தனமான செயலில் இவர்கள் ஈடுபடுவதாகவும் அந்தப் பதிவில் சாடப்பட்டுள்ளது. மேலும், நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியுடன் இவர்கள் தனியாக என்ன பேசினார்கள்? என்பதையும் விளக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

   

கழகம் யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இவர்கள் யார் என வினவியுள்ள அதிமுக தலைமை, சுமார் 1.34 கோடி வாக்குகள் இரட்டை இலைக்காகவும் எடப்பாடியாருக்காகவுமே மக்கள் அளித்தவை என்று குறிப்பிட்டுள்ளது. எடப்பாடியாரால் தான் தொண்டர்கள் மற்றும் இந்த இயக்கம் இயங்குவதாகவும், இந்த அதிகாரத் திமிரையும் பண்ணையார்தனத்தையும் தொண்டர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அதிமுக அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.