தேனி மாவட்டம் கோம்பை அருகே, குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லவராயன்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மர் என்பவர், நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், அவர் வீட்டில் இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதோடு, குடும்பத்தினரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தர்மரின் அத்துமீறிய செயலால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சந்திரா மற்றும் மகன் அஜித் ஆகிய இருவரும், அங்கிருந்த கட்டையை எடுத்துத் தர்மரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த தர்மர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கோம்பை காவல்துறையினர், தர்மரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய சந்திரா மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
