உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் (Hathras) மாவட்டத்தில், திருமணமான பெண் ஒருவர் திடீரென மொபைல் டவர் ஒன்றின் உச்சாணிக் கிளைக்கு ஏறி ‘ஹை-வோல்டேஜ்’ நாடகத்தை அரங்கேற்றினார். சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், டவர் மீது நின்றுகொண்டு தான் தனது காதலனுடன் வாழ விரும்புவதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும் கூச்சலிட்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி புகுந்த வீட்டில் வசித்து வந்த அந்தப் பெண், தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்றும், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைத் தான் காதலிப்பதாகவும் தெரிவித்தார். அந்த இளைஞனுடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அவர் சுமார் மூன்று மணி நேரம் டவர் உச்சியிலேயே நின்றிருந்தார். இந்தச் சம்பவம் ‘ஷோலே’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற காட்சியை நினைவுபடுத்துவதாக அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். “கீழே இறங்கி வாருங்கள், உங்களது பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” எனப் பலமுறை போலீசார் கொடுத்த உறுதிமொழியை அடுத்து, அவர் ஒருவழியாகக் கீழே இறங்கச் சம்மதித்தார். பாதுகாப்பாகக் மீட்கப்பட்ட அந்தப் பெண்ணிற்குத் தற்போது உரிய ஆலோசனைகள் (Counselling) வழங்கப்பட்டு வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
