கல்யாண மேடையில் ட்விஸ்ட்… தாலி கட்டும் நேரத்தில் பெண் டாக்டர் செய்த காரியம்… கதறி அழுத மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய சினிமா பாணி டுவிஸ்ட்…!

By Nanthini on சித்திரை 26, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சிர்சியில், திருமண மேடையில் தாலி கட்டும் நேரத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம்பெண் எம்பிபிஎஸ் முடித்து மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஒரு இளைஞருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, சிர்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை கோலாகலமாக ஏற்பாடுகள் நடைபெற்றன. மண்டபம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, உறவினர்கள் புடைசூழ விழா களைகட்டியிருந்தது.

திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற நிச்சயதார்த்த சடங்குகள் முடிந்து, முகூர்த்த நேரம் நெருங்கிய வேளையில் மணமகன் மணமேடையில் காத்துக்கொண்டிருந்தார். ஆனால், மணப்பெண்ணை அழைத்து வருவதற்காக அறைக்குச் சென்ற உறவினர்கள், அவர் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருமண மண்டபம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்காததால், மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர். ஒருபுறம் விருந்து உபசாரங்கள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் மணப்பெண் மாயமான தகவல் தீயாய் பரவி திருமண வீட்டாரை சோகத்தில் ஆழ்த்தியது.

   

இந்த விவகாரம் குறித்து மணமகன் வீட்டார் கடும் அதிருப்தி அடைந்த நிலையில், விவகாரம் சிர்சி நியூ மார்க்கெட் காவல் நிலையத்திற்குச் சென்றது. விசாரணையில், மணப்பெண் தனது மருத்துவப் படிப்பின் போது சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததும், அதற்கு பெற்றோர் சம்மதிக்காததால் அவசர அவசரமாக இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. தனது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், வேறு வழியின்றி திருமண நாளில் மண்டபத்திலிருந்து அவர் வெளியேறியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியானது.

   

பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில், தனது மகளை அவருடைய காதலன் கடத்திச் சென்றிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். கனவு இல்லறத்தில் நுழையக் காத்திருந்த மணமகனுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், போலீசார் தற்போது தலைமறைவாக உள்ள பெண் மருத்துவர் மற்றும் அவரது காதலனைத் தேடி வருகின்றனர். மகிழ்ச்சியுடன் தொடங்க வேண்டிய திருமண விழா, பாதியிலேயே நின்றுபோனது அந்தப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.