விஷமுள்ள சிலந்தி கடித்ததால் இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட மோசமான பாதிப்புகள் குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழுப்பு நிற ‘ரெக்லஸ்’ (Brown Recluse) வகை சிலந்திகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. மைனிடா எஸ். என்ற பெண், மே 17, அன்று எதிர்பாராத விதமாக இந்த வகை சிலந்தியால் கடிக்கப்பட்டார். கடிபட்ட சில நிமிடங்களிலேயே ஆரோக்கியமாக இருந்த அவரது உடல்நிலை மிக வேகமாக மோசமடைந்தது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விவரங்கள் அதிர வைக்கின்றன.
View this post on Instagram
சிலந்தி கடித்த சில நிமிடங்களிலேயே அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இதன் காரணமாக அவர் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகும், அதன் பாதிப்புகள் நீண்ட நாட்களாகத் தொடர்வதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திடீரெனத் தோன்றும் அறிகுறிகள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதால், இதுபோன்ற விஷப் பூச்சிகள் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று இந்த சம்பவம் எச்சரிக்கிறது.
