அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் ஈரானுக்கு எதிராகப் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “இனிமேல் நல்லவன் வேடம் போட முடியாது (No more Mr. Nice Guy)” என்று குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் மீது மிகக்கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என்று கூறியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று அவர் சாடியுள்ளார்.
நாங்கள் முன்வைத்துள்ள “மிகவும் நியாயமான ஒப்பந்தத்தை” ஈரான் ஏற்க வேண்டும், தவறினால் அந்த நாட்டின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையங்களையும் (Power Plants) மற்றும் ஒவ்வொரு பாலங்களையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும் என்று ட்ரம்ப் மிரட்டியுள்ளார். கடந்த 47 ஆண்டுகளாக மற்ற அமெரிக்க அதிபர்கள் செய்யத் தவறியதை தான் செய்யப்போவதாகவும், “ஈரானின் கொலை இயந்திரத்தை” (Iran Killing Machine) முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்காவின் துறைமுக முற்றுகையை நீக்கினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க முடியும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் வரும் புதன்கிழமை முடிவடைய உள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த பகீர் எச்சரிக்கை உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
