கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜேசுராஜபுரத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (40) என்பவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இவர் அப்பகுதி திமுக இளைஞர் அணி நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தையின் தாய் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், அங்கு வந்த பெரியநாயகம் குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டதும், அதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆரம்பத்தில் குழந்தைக்கு வலிப்பு வந்ததாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்களின் சோதனையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், குழந்தையின் உடலில் கடுமையான உள்காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது கொலையல்ல, பாலியல் அத்துமீறலால் ஏற்பட்ட மரணம் என்பது உறுதியானதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பெரியநாயகத்தைக் கைது செய்தனர். தற்போது அவர் தர்மபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
