திமுக கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, பாமக வட மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாகப் பரவலான பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் மூன்றாம் நாளாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில் பேசிய மருத்துவர் ராமதாஸ், “நாம் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்” என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம், தனித்துப் போட்டி என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, பாமக ஒரு பலமான கூட்டணியை எதிர்நோக்கி காத்திருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதுள்ள அரசியல் சூழலில், அதிமுக அல்லது பாஜக ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் பாமக கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனு அளித்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த நேர்காணல், தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் இந்த வியூகம் வரும் தேர்தலில் வட மாவட்டங்களில் எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை நிகழ்த்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
