நடிகர் அஜீத்குமார், தமிழில் ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார். அப்போது தெலுங்கில் ஒரு படம் நடிக்க வாய்ப்பு வந்தது. பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்தான் அந்த படத்தில் அஜீத்குமார் நடிக்கட்டும் என சிபாரிசு செய்தவர். பிரபல தெலுங்கு நடிகர் கொல்லுப்புடி மாருதி ராவ். இவரது மகன் கொல்லுப்புடி சீனிவாசன். அப்பாவின் தயாரிப்பில், மகன்தான் இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார். 9 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அஜீத்குமாரும் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்துள்ளார். ஒரு நாள், கடற்கரையில் லோகேஷன் பார்க்க படக்குழு சென்றுள்ளது.

அப்போது, படத்தின் இயக்குநர் கொல்லுப்புடி சீனிவாசன், பெரிய அலை ஒன்று அடிக்கும்போது நான் போஸ் தருகிறேன். அதை புகைப்படமாக எடுத்துக்கொள்ளுங்கள். படத்தின் டைரக்ஷன் டைட்டில் கார்டு போடும்போது அதை பயன்படுத்துங்கள் எனக் கூறிவிட்டு கடலில் இருந்து பெரிய அலை வரும்போது நின்று போஸ் தந்திருக்கிறார். அந்த அலை அவரை அப்படியே உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது. பிறகு அவர் காணாமல் போய்விட்டார். பின்னர் சடலமாக தான் மீட்கப்பட்டார்.

அவரது தந்தை கொல்லுப்புடி மாருதிராவ், கமல்ஹாசனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இந்திரன் சந்திரன், ஹேராம் ஆகிய படங்களில் அவரை, கமல் நடிக்க செய்திருப்பார். அவர் மகனுக்கு நேர்ந்த சோகத்தால் கமல் மிகவும் வருத்தப்பட்டார். இதையடுத்து அன்பே சிவம் படத்தில், ஒரு காட்சியில் தனது தந்தை பெரிய அலைக்கு முன் நின்று போட்டோவுக்கு போஸ் தர ஆசைப்பட்டார். ஆனால் அவரை அலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது என கூறுவது போன்ற காட்சி வரும். அது, தன் தெலுங்கு நடிகர் நண்பரின் வாழ்வில் நடந்த சோகம் என ஒரு நேர்காணலிலும் கமல் கூறியுள்ளார்.
