ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், காதல் திருமணத்தை ஏற்காத தந்தை தனது மகளையே தலையணையால் அமுக்கிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனு – கங்கா தம்பதியின் மகள் சவுடேஸ்வரி, நாகராஜ் என்ற இளைஞரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். நாகராஜ் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் ஏழ்மையானவர் என்பதால், இவர்களது காதலுக்கு சவுடேஸ்வரியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகளுக்கு வேறொரு நபருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நிலையில், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
மகள் ஓடிப்போனதால் ஊர் முன்னிலையில் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதிய சீனு, சவுடேஸ்வரி மீது நகைகளைத் திருடிச் சென்றதாகக் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்தார். இதனையடுத்து, போலீஸார் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில், சவுடேஸ்வரியை ஐந்து நாட்கள் மட்டும் தந்தை வீட்டில் இருக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் தனது விருப்பப்படியே திருமணம் செய்துகொண்டதாகத் தைரியமாகத் தெரிவித்த போதிலும், ஆத்திரத்தில் இருந்த தந்தை, தனது மனைவி மற்றும் மகனை வீட்டிற்கு வெளியே அனுப்பிவிட்டு, உறவினர் ஒருவரின் உதவியுடன் தூங்கிக் கொண்டிருந்த சவுடேஸ்வரியைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, சவுடேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய சீனுவின் பொய், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அம்பலமானது. அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கௌரவக் கொலை செய்ததைச் சீனு ஒப்புக்கொண்டார். பெற்ற மகளையே சாதி வெறியால் தந்தை கொன்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
