நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat) அவல நிலையை வீடியோவாக வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 22-வது மாடியில் வீடு வாங்கியுள்ள அவர், வீட்டின் உட்புறத்தை (Interior) அழகாக மாற்ற முடிந்தாலும், வெளிப்புறத்தின் மோசமான நிலையைக் கண்டு தான் ஏமாந்துவிட்டதாக வருத்தப்படுகிறார். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் புறாக்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், அவற்றின் கழிவுகள் மற்றும் அசுத்தங்களால் தனது பால்கனி பகுதி முழுவதும் புழுக்களும் பூச்சிகளும் மொய்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
View this post on Instagram
புறாக்களால் பரவும் இந்த அசுத்தங்கள் மற்றும் கிருமிகளால் தனது கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சிவந்த நிலையில் உள்ள தனது கண்களையும் அவர் வீடியோவில் காட்டியுள்ளார். இந்த சுகாதாரமற்ற சூழலில் இருந்து தப்பிக்கத் தனது பால்கனியில் வலைகள் மற்றும் கதவுகளை அமைத்த பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று ஆதர்ஷ் வேதனை தெரிவிக்கிறார். “இவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய வீட்டில் இதையெல்லாம் பார்ப்பதற்காகவா நான் முதலீடு செய்தேன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பல லட்சங்களைச் செலவழித்து அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதை விட, சொந்தமாக ஒரு இடத்தையோ அல்லது தனி வீட்டைத் தேர்ந்தெடுப்பதோ சிறந்தது என்றும் அவர் தனது வீடியோவில் அறிவுறுத்தியுள்ளார்.
