தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தங்களின் நிர்வாகப் பாதையில் யாரை நம்புவது என்ற குழப்பத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து இடமாற்றம் செய்து பந்தாடி வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய திறமையான அதிகாரிகள், தற்போதைய புதிய ஆட்சியில் தங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்களோ என்ற தேவையற்ற அச்சமும், சந்தேகமுமே இந்தத் தொடர் மாற்றங்களுக்குப் பின்னணியாக அமைந்துள்ளது. எந்தவொரு புதிய அரசும் ஆரம்பக் கட்டத்தில் இத்தகைய தடுமாற்றங்களைச் சந்திப்பது இயல்புதான் என்றாலும், ஒரு குழந்தை அரசு போல அவசரப்பட்டு “எடுத்தோம் கவிழ்த்தோம்” என்ற பாணியில் செயல்படுவது நிர்வாகச் சீர்குலைவிற்கே வழிவகுக்கும்.
நேர்மையான மற்றும் திறமையான உயர் அதிகாரிகள் எந்த ஆட்சி அமைந்தாலும், அரசின் திட்டங்களை செம்மையாக மக்களிடம் கொண்டு சேர்த்து, துறையின் வளர்ச்சிக்காக மட்டுமே உழைக்கக்கூடியவர்கள். இவர்களின் நிர்வாக அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், தங்களுக்கு விசுவாசமாக இருப்பார்களா என்ற ஒற்றை நோக்கில் மட்டும் அதிகாரிகளைப் பந்தாடுவது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்துவிடும். அரசுக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும், அனுபவமிக்க அதிகாரிகளை ஓரம் கட்டுவது புதிய அரசுக்கு இன்னும் கூடுதல் சவால்களையே உருவாக்கும்.
தற்போது அமைந்துள்ள புதிய அரசுக்கு மக்கள் மத்தியில் நற்பெயரைச் சம்பாதிக்க இன்னும் போதிய கால அவகாசம் உள்ளது. எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும், அச்சத்தையும் கடந்து, திறமையான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதை விடுத்து, தொடர்ந்து அதிகாரிகளைப் பந்தாடிக்கொண்டே இருந்தால், நிலையான மற்றும் சீரானதொரு நிர்வாகத்தைத் தருவதில் தொய்வு ஏற்பட்டு, அதன் நேரடிப் பாதிப்பை இறுதியில் மக்களே சந்திக்க நேரிடும் என்பதைப் புதிய அரசு உணர வேண்டும்.
