மகளிர் உரிமைத்தொகை கிடைக்கலையா?.. கவலை வேண்டாம்!.. பெண்களுக்கு தமிழக அரசின் அடுத்த ‘பம்பர்’ திட்டம்..!!

By Muthu Mani on ஆனி 9, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தமிழ்புதல்வன், புதுமைப் பெண் மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், படித்துவிட்டு வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்களுக்காக “வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை பெறாத, வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் தங்களுக்குரிய மாத உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்திற்கான தகுதியுடைய நபர்கள் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ அல்லது ‘டிஎன் வேலைவாய்ப்பு’ (TN Employment) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ ஆன்லைனில் மிக எளிதாக விண்ணப்பிக்கலாம். பயனாளிகளின் கல்வித் தகுதிக்கு ஏற்ப இந்த உதவித்தொகை மாறுபடுகிறது. அதன்படி, பத்தாம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலைக்கல்வி (பிளஸ் 2) முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு (Degree) மாதம் ரூ.600 வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

   

மாற்றுத்திறனாளிப் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கூடுதல் உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.600 வழங்கப்படும். மேலும் மேல்நிலைவகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750 மற்றும் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு என்று சில பிரத்யேக விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் அவற்றை முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவின் அடிப்படையில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.