வளர்ப்புப் பராமரிப்பாளர் மற்றும் அவரது மகனால் தனது ஒட்டுமொத்த குழந்தைப் பருவமும், வாழ்க்கையும் எப்படிச் சீரழிந்தது என்பது குறித்து அமண்டா ப்ரோ என்ற பெண்மணி பல ஆண்டுகளுக்குப் பிறகு தைரியமாக வெளியே பேசியுள்ளார். அமண்டா வெறும் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது, சமூக சேவைகளால் அவரது உயிரியல் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, ஸ்காட்லாந்தின் பெர்த்ஷையரில் உள்ள முர்த்லியில் வசித்து வந்த ஜெனிஃபர் ராபர்ட்சன் (79) என்பவரது வளர்ப்புப் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு ஐந்து வயது வரை வளர்ந்த அமண்டா, ஜெனிஃபரிடமிருந்து தொடர்ச்சியான உடல்ரீதியான தாக்குதல்களையும், அதே வீட்டில் வசித்து வந்த ஜெனிஃபரின் மகனான ஸ்டீவன் (52) என்பவரிடமிருந்து மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளையும் தினந்தோறும் அனுபவித்து வந்துள்ளார்.
அமண்டா குழந்தையாக இருந்ததால் இந்தத் கொடுமைகள் எப்போது தொடங்கியது என்றே தெரியாத அளவிற்கு, ஸ்டீவன் இரவில் அவரது படுக்கையறைக்கு வந்து தொடர்ந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். மற்ற குழந்தைகளுடனும் பாலியல் செயலில் ஈடுபடுமாறு அமண்டாவை வற்புறுத்திய ஸ்டீவன், இது ஒரு சாதாரண விஷயம் என்று நம்ப வைத்துள்ளார்; இதனால் தான் காயப்படாத ஒரு நாள் கூட தன் நினைவில் இல்லை என்று அமண்டா கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். தனது மகன் செய்யும் இந்த அசிங்கமான காரியங்கள் தெரிந்திருந்தும் வளர்ப்புத் தாய் ஜெனிஃபர் அதைத் தடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார். மேலும், ஜெனிஃபர் தனது இல்லத்தில் அமண்டா உட்பட நான்கு சிறு குழந்தைகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததும் அரசு அதிகாரிகள் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு அமண்டா தைரியமாக அளித்த புகாரின் அடிப்படையில், எடின்பர்க் உயர் நீதிமன்றத்தில் இந்தத் தாய் மற்றும் மகனுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொடூரக் குற்றவாளியான ஸ்டீவன் ராபர்ட்சனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், கூடுதலாக 3 ஆண்டுகள் கண்காணிப்பு நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. “அவர்கள் என் குழந்தைப் பருவத்தை மட்டுமல்ல, நீதியைப் பெறுவதற்காக நான் போராடிய இந்த ஆண்டுகளையும் திருடிவிட்டார்கள்; நான் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்” என்று வேதனையுடன் அமண்டா தெரிவித்துள்ளார். இத்தனை காலத் துயரங்களைக் கடந்து அமண்டா குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளதற்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
