இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவர் பகிர்ந்துள்ள ஒரு பழைய புகைப்படம் இணையத்தில் தற்போது பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரெனெடாவுக்கு 9 வயது சிறுமியாக இருந்தபோது, அவரது தற்போதைய கணவரின் இரண்டாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தனது குடும்பத்தினருடன் அவர் சென்றுள்ளார். அப்போது மணமக்களுடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் எதேர்ச்சையாக அவரது கணவரின் பழைய திருமண ஆல்பத்தைப் பார்த்தபோதுதான் தெரியவந்துள்ளது. இந்த வியக்கத்தக்க எதேச்சையான உண்மை, சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வைரலாகி வருகிறது.
தங்களுக்குள் இருக்கும் 38 வயது வித்தியாசத்தைக் கடந்து இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவரின் முந்தைய விவாகரத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரெனெடா ஃபதியா தெளிவுபடுத்தியுள்ளார் . அவரது கணவர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த சில ஆண்டுகளுக்குப் பிறகே, தங்களுக்குள் காதல் மலர்ந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார் . “விதி யாரை எப்போது எப்படி இணைக்கும் என்று கூற முடியாது” என்ற வரிகளுக்கு உதாரணமாகத் திகழும் இவர்களது காதல் கதை, உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .
