உத்தரப் பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தில் உள்ள பான்டா பகுதியில், நில விற்பனை தொடர்பான குடும்பத் தகராறில் ஒரு நபர் தனது சொந்தத் தாயையும் தம்பியையும் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட தினேஷ், தனது தாயார் நிலத்தை விற்பனை செய்து அந்தப் பணத்தை தம்பிக்குக் கொடுக்கத் திட்டமிட்டதை அறிந்து ஆத்திரமடைந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
உலகமே அன்னையர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தினேஷ் தனது தாய் மற்றும் தம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற கொலையாளி தினேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு சிறிய நிலப் பிரச்சனைக்காகப் பெற்ற தாயையும் உடன் பிறந்த தம்பியையும் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
