இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது வயது வித்தியாசமின்றி பலரையும் பாதிக்கும் ஒரு பெரும் அச்சமாக மாறியுள்ளது. குறிப்பாக, எவ்வித வெளிப்படையான எச்சரிக்கையும் இன்றி வரும் ‘சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ (Silent Heart Attack) எனப்படும் அமைதியான மாரடைப்பு மிகவும் ஆபத்தானது. இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடையாகி தமனிகள் சேதமடைவதே மாரடைப்புக்குக் காரணம். ஆனால், இதன் அறிகுறிகள் மிகவும் லேசாக இருப்பதால், பெரும்பாலானோர் இதைச் சாதாரண உடல் சோர்வு அல்லது அசிடிட்டி என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். இதுவே பின்னாட்களில் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அமைதியான மாரடைப்பின் மிக முக்கிய அறிகுறி, போதுமான ஓய்வு எடுத்த பின்பும் நீங்காத அசாதாரண சோர்வு மற்றும் அடிக்கடி ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகும். இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய சிரமப்படும்போது நுரையீரல் பாதிப்படைந்து மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது தவிர, திடீர் தலைசுற்றல், குமட்டல் மற்றும் வயிறு உப்புசம் போன்றவையும் இதன் எச்சரிக்கை மணிகளே. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் நரம்பு மண்டலம் பாதிப்படைவதை மக்கள் பெரும்பாலும் செரிமானக் கோளாறு அல்லது நீர்ச்சத்து குறைபாடு என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
தூக்கத்தில் ஏற்படும் திடீர் தொந்தரவு மற்றும் காரணமற்ற பதற்றம் ஆகியவை உடல் நமக்குத் தரும் முன் எச்சரிக்கையாகும். விட்டு விட்டு வரும் நெஞ்சு வலி அல்லது ஒருவித அசௌகரியத்தை அஜீரணம் என்று தள்ளிப்போடக் கூடாது. குறிப்பாகப் பெண்களுக்கு இந்த சைலன்ட் ஹார்ட் அட்டாக் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. உடற்பயிற்சி இன்மை, அதிக கொலஸ்ட்ரால், புகைப்பிடிக்கும் பழக்கம், முதுமை மற்றும் குடும்பப் பின்னணியில் இதய நோய் இருப்பவர்கள் இந்தச் சிறிய மாற்றங்களையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம்.
இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவரை அணுகுவதன் மூலம் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் போன்ற பெரிய அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்க முடியும். முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் இதய ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். எனவே, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியம் செய்யாமல், ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சியுடன் இதைப் பாதுகாப்பதே புத்திசாலித்தனம்.
