சன்டிவியில் மிகவும் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்ட ஒரு சீரியல் எதிர்நீச்சல். இதில் பெண்களை அடிமைப்படுத்தி நடத்தும் ஆணாதிக்க கதை சொல்லும் சீரியலாக இருந்ததால் பெண்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ஆதி குணசேகரன் நடித்த நடிகர் மாரிமுத்து, நடிப்பில் பிச்சு உதறினார். ஏய் இந்தாம்மா என்ற அவரது தேனி மாவட்ட மொழி உச்சரிப்பும், கெத்தான நடிப்பும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பெண்களுக்கு எதிரான அவரது செயல்பாடுகளும், அதற்கு அவரது தம்பிகள் தரும் ஒத்துழைப்பும், அதனால் அந்த வீட்டில் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இந்த கதை விறுவிறுப்பான தொடராக சென்றது.
இந்நிலையில், கண் திருஷ்டி பட்டது போல, இந்த சீரியலில் ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து, உடல்நலக்குறைவால் இறந்து போனார். இதையடுத்து அந்த கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு, அந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்தார். இவரும் பிரபலமான சினிமா நடிகர்தான். ஆனால் அந்த ஆதிகுணசேகரன் கேரக்டருக்கு இவர் சரியாக செட்டாகவில்லை. மாரிமுத்துவை பிடித்த அளவுக்கு, வேல ராமமூர்த்தியை ரசிகர்களால் ரசித்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதனால் இந்த சீரியலுக்கு பார்வையாளர்களின் மத்தியில் இருந்த வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே நிறைய ஆண்டுகள் இந்த சீரியல் ஓடி விட்டதால் விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க டைரக்டர் திருச்செல்வம் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அல்லது எதிர்நீச்சல் 2ம் பாகம் என்ற பெயரில், இதன் கிளைக்கதை ஒன்றை துவக்கவும் வாய்ப்புள்ளது. இதில் உள்ள கேரக்டர்களில் ஏதேனும் ஒரு கேரக்டரை பெரிய அளவில் டெவலப் செய்து அதை ஒட்டிய கிளைக்கதையை மையப்படுத்தி இந்த கதையை திருச்செல்வம் தொடர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் வேல ராமமூர்த்தியை ஆதி குணசேகரனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததால் எதிர்நீச்சலுக்கு எண்டு கார்டு போட டைரக்டர் முடிவு உறுதியாகி விட்டது.