தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது கூட்டணிக்குள் நிலவிய சலசலப்புகள் முடிவுக்கு வருவதாகத் தெரிகிறது. டெல்லியில் இருந்து காங்கிரஸ் மேலிடம் விடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து, சோனியா காந்தி நேரடியாக மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் உரையாடியதாகத் தகவல்கள் கசிகின்றன. தொடக்கத்தில் 41 தொகுதிகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் என்ற திமுகவின் இறுதித் திட்டத்திற்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திடீர் இணக்கத்திற்குப் பின்னால் ஒரு முக்கியமான அரசியல் ராஜதந்திரம் ஒளிந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், அது தமிழகத்தில் தவெக போன்ற மாற்று சக்திகளுடன் இணைய வழிவகுக்கும்; அவ்வாறு நடந்தால் அது தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்பதில் சோனியா காந்தி கவனமாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால், கூட்டணியை சூழ்ந்திருந்த முரண்பாடு எனும் கருமேகங்கள் விலகி, விரைவில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
