பெங்களூரு ராமமூர்த்தி நகரில் வசித்து வந்த ஷர்மிளா என்ற மென்பொருள் பொறியாளர், கடந்த 3-ம் தேதி தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்ட நிலையில், காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் இது திட்டமிடப்பட்ட கொடூரக் கொலை என்பது உறுதியானது.
ஷர்மிளாவின் காணாமல் போன செல்போனைப் புலனாய்வு செய்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவன் அதைப் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே கொலையாளியை அடையாளம் காண முக்கிய ஆதாரமாக அமைந்தது.
சம்பவத்தன்று இரவு ஜன்னல் வழியாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த மாணவன், ஷர்மிளாவை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மூச்சுத்திணறச் செய்து கொலை செய்துள்ளான். பின்னர், இந்த கொலையை விபத்து போலச் சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படுக்கையறையில் இருந்த ஆடைகளுக்குத் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். தற்போது அந்த மாணவனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
