“இன்னும் சினிமா படத்திலேயே இருக்கீங்க…” CM விஜய் ‘ஓடு ஓடு’ சைகைக்கு… செம நோஸ்கட் கொடுத்த சிவசங்கர்…!

By Swetha on ஆடி 11, 2026

Spread the love

கரூரில் தவெக சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பை விமர்சித்த சிவசங்கர், அன்று பிரச்சாரத்திற்கு வருவதாகக் கூறிவிட்டு நடிகர் விஜய் சரியான நேரத்திற்கு வராமல் தாமதம் செய்ததால்தான் 41 பேர் உயிரிழந்தனர் என்ற கசப்பான உண்மையை இந்த நினைவுச்சின்னம் மக்களுக்குக் காலத்திற்கும் நினைவூட்டும் என்றார். மேலும், அன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கூப்பிட்டபோது அவர்களுக்குப் பதிலளிக்காமல் விஜய் வேகமாகத் திரும்பி நடந்து சென்றாரே, அந்த “முதுகு” தான் தமிழக மக்களின் மனதில் தற்போதைய உண்மையான நினைவுச்சின்னமாக இருக்கிறது என்றும் அவர் சாடினார்.

விஜய் இன்னும் திரைப்படங்களை விட்டு வெளியே வரவில்லை என்று குறிப்பிட்ட சிவசங்கர், மேடையில் விஜய் ‘ஓடு ஓடு’ என சைகை காட்டிப் பேசியதைச் சுட்டிக்காட்டினார். கரூர் துயரச் சம்பவம் நடந்த அன்று, அங்கு பாதிப்பு ஏற்பட்டவுடன் மக்களைத் தவிக்கவிட்டுவிட்டு கரூரிலிருந்து சென்னைக்கு வேகமாக ஓடி வந்தது யார் என்பது இந்த நாட்டிற்கே தெரியும் என்றும், அந்த ‘ஓடு ஓடு’ என்ற வார்த்தைக்கு முதலமைச்சர் விஜய்தான் மிகச் சிறந்த உதாரணம் என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிலை மேற்கோள் காட்டி அவர் விமர்சித்தார்.

   

அன்றைய முதலமைச்சர் ஸ்டாலினும், உள்ளூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியும் ஏன் சம்பவ இடத்திற்கு வேகமாகச் சென்றார்கள் என்று விஜய் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அவர், தனது ஆட்சியில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது பொறுப்புணர்வோடு ஓடிப் போய்ப் பார்ப்பதுதான் ஒரு உண்மையான ஆட்சியாளரின் மரபு என்று கூறினார். மேலும், தற்போதைய அரசுத் திட்டங்கள் மற்றும் உதவிகளைத் தனது சொந்தக் கட்சியின் ஆட்சி போல நினைத்து விஜய் செயல்படுவதாகவும், சினிமா நடிகர்களைப் பார்க்கக் கூடும் கூட்டங்களில் அசம்பாவிதங்கள் நடந்தால் அரசு வேலை கொடுப்பது போன்ற அறிவிப்புகள் தவறான அரசியல் முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.