திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் உன்னதமான பந்தமாகும். ஆனால், இன்றும் சில ஆண்களிடம் நிலவும் பிற்போக்கான புரிதல்களும், அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளும் அந்தப் புனிதமான பந்தத்தை முதலிரவிலேயே சிதைத்து விடுகின்றன. கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், படித்த இளைஞர்களிடமும் கூட பெண்களின் உடல் குறித்த புரிதல் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
மென்பொருள் பொறியாளரான ராகுலுக்கும் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான அனன்யாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாகத் தொடங்க வேண்டிய அவர்களது முதல் இரவில், ராகுல் கேட்ட ஒரு கேள்வி அனன்யாவின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. உடலுறவின் போது ரத்தம் வரவில்லை என்பதை வைத்து, அனன்யாவின் கன்னித்தன்மையை ராகுல் சந்தேகித்துக் கேள்வி எழுப்பினார். ஒரு விளையாட்டு வீராங்கனையான அனன்யாவுக்கு, இது பெரும் அவமானமாகவும் மன உளைச்சலாகவும் அமைந்தது.
மருத்துவ ரீதியாகப் பார்த்தால், கன்னித்திரை (Hymen) என்பது ஒரு மெல்லிய சவ்வு மட்டுமே. இது விளையாட்டு, மிதிவண்டி ஓட்டுதல் அல்லது கடுமையான உடற்பயிற்சிகளின் போது இயல்பாகவே கிழிந்துவிடக் கூடியது. சில பெண்களுக்குப் பிறப்பிலேயே இது இல்லாமலும் இருக்கலாம். எனவே, உடலுறவின் போது ரத்தம் வருவதை மட்டுமே கன்னித்தன்மையின் அடையாளமாகக் கருதுவது அறியாமையின் உச்சமாகும். இந்த மூடநம்பிக்கையால் மனமுடைந்த அனன்யா விபரீத முடிவெடுக்க முயன்று, பின் காப்பற்றப்பட்டார். இறுதியில் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது.
கணவன் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட போதிலும், “தன்னைப் புரிந்துகொள்ளாத ஒருவருடன் வாழ்வதை விட தனிமையே மேல்” என அனன்யா பிரிந்து செல்ல முடிவெடுத்தார். நவீன காலத்தில் வாழும் இளைஞர்கள் இத்தகைய பிற்போக்கு எண்ணங்களைக் கைவிட்டு, பெண்ணின் உடலையும் மனதையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இத்தகைய தேவையற்ற மூடநம்பிக்கைகளால் இன்னும் பல குடும்பங்கள் சிதைவதைத் தடுக்க முடியாது என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
