தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெ அரசு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களைத் தொடர்ந்து மாற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ என்ற திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்து தவெக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்பாகவும் திமுக வேறு முக்கியத் திட்டங்களின் பெயர்கள் தவெக அரசால் மாற்றப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் ‘திறன் தமிழ்நாடு’ என மாற்றப்பட்டது. அதேபோல, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டமான ‘மகளிர் விடியல் பயணம்’ என்பதில் இருந்து ‘விடியல்’ என்ற சொல் நீக்கப்பட்டு ‘மகளிர் பயணம்’ என்றும், முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் ‘தாயுமானவர் திட்டம்’, ‘வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம்’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு ‘விபி ஜி ராம்ஜி திட்டம்’ என மாற்றியபோது தவெக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு பாஜகவின் அந்தப் பெயர் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தவெக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு முந்தைய திமுக அரசின் திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு வரிசையாக மறுபெயரிட்டு வருகிறது.
