யார் சாமி நீ… பகலில் ஆட்டோ டிரைவர்… இரவில் ரயில் கொள்ளையன்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!

By Swetha on ஆனி 20, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 15-ஆம் தேதி இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நிறுத்தப்பட்டு, பின்னர் மெதுவாக இயக்கப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாகவே ரயில் நின்றதாகக் கருதப்பட்ட நிலையில், ரயிலில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அசுதா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்றார். அப்பெண் கூச்சலிட்டதால், சங்கிலியின் பாதியை மட்டும் அறுத்துக் கொண்டு அந்த நபர் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினார். பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

ரயில்வே நிர்வாகமும் போலீசாரும் நடத்திய தீவிர விசாரணையில், அன்றைய தினம் சிக்னலில் எந்தக் கோளாறும் ஏற்படவில்லை என்ற அதிர்ச்சி உண்மை வெளிவந்தது. கொள்ளையன் ரயிலை நிறுத்துவதற்காக, தண்டவாளத்தின் இருபுறமும் இருந்த பச்சை நிற சிக்னல் விளக்குகளைத் தனது சட்டைத் துணியால் மறைத்துச் சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிக்னல் தெரியாததால் ரயில் நின்ற உடனோ அல்லது மெதுவாகச் செல்லும் போதோ பயணிகளிடம் கொள்ளையடிப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குமரேசன் என்பதை அடையாளம் கண்டனர்.

   

கைது செய்யப்பட்ட குமரேசன் பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டே, இரவு நேரங்களில் ரயில்களை மறித்துக் கொள்ளையடிப்பதைக் கைவந்த கலையாக வைத்திருந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், குண்டர் சட்டத்தில் சிறைக்குச் சென்று சமீபத்தில் தான் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் பதுங்கியிருந்த குமரேசனை தாம்பரம் ரயில்வே போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலியையும் மீட்டனர்.