கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (45) விவசாயி. இவருக்கு மனைவி சென்னியம்மாள் (42), மகன் நாராயணன் (22) சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். நாராயணன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்த மாதம் செப்டம்பர் 4ஆம் தேதி மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்து வரவேற்பு அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர்.
நேற்று உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க பெற்றோரை அழைத்துக் கொண்டு நாராயணன் பைக்கில் சங்கராபுரம் – திருக்கோவிலூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அருகிலிருந்த மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் சென்னியம்மாள் பரிதாபமாக உயிரை விட்டனர்.
மேல் சிகிச்சைக்காக நாராயணனை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே நாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான இரண்டே மாதத்தில் புது மாப்பிள்ளை இறந்த துயரம் தாங்காமல் புதுமணப்பெண் கத்திக்கதறி அழுதுள்ளார். இதைக் கண்டு அனைவருக்கும் கண்களில் தானாகவே நீர் பாய்ந்தது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் காரை விட்டுவிட்டு தப்பித்து ஓடி விட்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
