குஜராத் மாநிலம் ஜாம்நகரின் ஷாரு செக்ஷன் சாலையில் உள்ள சந்த் கபீர் அவாஸ் பகுதியில், விலங்கு வதை தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், அங்கிருந்த தெரு நாய் ஒன்றை அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து கொடூரமான முறையில் கீழே தூக்கி வீசியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற செயலின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களைப் பதறவைக்கும் வகையில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்தக் கொடூரமான காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் அந்த இளைஞருக்கு எதிராகத் தங்கள் கடுமையான கண்டனங்களை ஆவேசமாகப் பதிவு செய்து வருகின்றனர். மனிதர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இணையாக விலங்கு வதை செய்பவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற நபர்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கே ஆபத்தான அரக்கர்கள் என்றும் அவர்கள் சாடியுள்ளனர். மேலும், வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது வீரம் ஆகாது எனக் குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள், இத்தகைய குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
