கர்நாடக மாநிலம் சென்னபட்டனா அருகே பி.வி.ஹள்ளி கிராமத்தில் உயிரிழந்த 80 வயது மூதாட்டியின் உடலைத் தழுவி குரங்கு ஒன்று அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பர்வதம்மா என்ற அந்த மூதாட்டி, கடந்த சில மாதங்களாகத் தன் வீட்டிற்கு வரும் குரங்கு ஒன்றிற்குத் தொடர்ந்து உணவளித்து அன்பு காட்டி வந்துள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பு உருவானது. வழக்கம்போல மூதாட்டியைப் பார்க்க வந்த அந்தக் குரங்கு, அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு மிகுந்த சோகத்துடன் அவரது உடலைக் கட்டிப்பிடித்து அஞ்சலி செலுத்தியது. மிருகங்களுக்கும் மனிதர்களுக்குமான உன்னதமான அன்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் மூதாட்டியின் இறுதிச்சடங்கு முடியும் வரை அங்கேயே காத்திருந்த அந்த குரங்கு, பசியால் வாடும் விலங்குகளிடம் காட்டும் சிறு கருணை கூட வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நன்றிக்கடனாக மாறும் என்பதற்குச் சாட்சியாக அமைந்தது. அந்தப் பகுதியே இந்த பாசப் போராட்டத்தைக் கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது; பின்னர் உள்ளூர் மக்கள் அந்தக் குரங்கைப் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
