சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பார் ஒன்றிற்கு யான்சி (18) என்ற இளம்பெண் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது, அவருக்கும் அங்கிருந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோதல் தீவிரமடைந்ததை அடுத்து, பாரின் பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். ஆனால், பாரிற்கு வெளியே வந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஓயாமல் தெருவிலேயே அடிதடியாகத் தொடர்ந்துள்ளது.
ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட பிறகு, யான்சி மற்றும் அவரது நண்பர்கள் மூன்று இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் காரில் பின் தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில், யான்சி தரப்பைச் சேர்ந்த சிலர் காரின் கண்ணாடி மீது கல் வீச முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், வாகனத்தை அதிவேகமாக இயக்கி யான்சி பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளார். இந்த கொடூர விபத்தில் தூக்கி வீசப்பட்ட யான்சி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவரான யான்சியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த 17 வயது சிறுமியும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, தற்பொழுது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு காரை ஓட்டி வந்த சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் காரை கோயம்பேடு புதிய மார்க்கெட் பகுதியில் நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு காவல் நிலைய போலீசார், கார் ஏற்றி கொலை செய்ததாகக் கூறப்படும் சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
