தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் நெல்லை தொகுதியை விட்டுவிட்டு சாத்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆறு மாதங்களாகத் தனது மகன்களைக் களமிறக்கி தேர்தல் பணிகளைச் செய்து வந்த நயினார் நாகேந்திரன், முக்குலத்தோர் சமூக வாக்குகளைப் பெரிதும் நம்பியுள்ளார். இதற்காக நெல்லையிலிருந்து 10-க்கும் மேற்பட்ட சிறப்புக் குழுக்களை வரவழைத்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தாலும், ‘வெளியூர்க்காரர்’ என்ற முத்திரை சாத்தூர் மக்களிடையே அவர் மீதான விமர்சனத்தைக் குறைக்கவில்லை.
சாத்தூர் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நயினார் நாகேந்திரன் பிரம்மாண்டமான ‘ரோடு ஷோ’ ஒன்றை நடத்தினார். இருப்பினும், இந்தப் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் யாரும் அவர்களைப் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைவர்கள் உற்சாகமாக வணக்கம் செலுத்திச் சென்றாலும், அங்கிருந்த மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளை இயல்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்களே தவிர, பாஜகவின் அணிவகுப்பைப் பெரிதாகச் சட்டை செய்யவில்லை.
நயினார் நாகேந்திரன் போன்ற ஒரு ‘பவர் சென்டர்’ தலைவர் வீதியில் இறங்கிப் பிரச்சாரம் செய்தபோதும், அவரது ஆதரவாளர்கள் சுமார் 50 பேரைத் தவிர வேறு பொதுமக்களின் பங்களிப்பு அங்குத் தென்படவில்லை. பாஜகவின் தேசியத் தலைவரே முன்னின்றும் மக்கள் காட்டிய இந்த அலட்சியம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தேசிய அளவில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிமுகவின் ஆதரவு இருந்தபோதிலும், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவது சவாலான காரியம் என்பதை இந்தச் சூழல் உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
