மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நூதனத் திருமண மோசடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் ஷிண்டே என்ற இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசாருக்கு, மணப்பெண் ஒன்பது முறை வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. கிராமப்புறங்களில் நீண்ட நாட்களாக பெண் கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களைக் குறிவைக்கும் ஒரு பெரிய மாஃபியா கும்பல் இதன் பின்னணியில் இருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்த கும்பல், வறுமையில் வாடும் பெண்களை முன்னிறுத்தி, இடைத்தரகர்கள் மூலம் மாப்பிள்ளை வீட்டாரிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுத் திருமணத்தை நடத்துகிறது. திருமணம் முடிந்ததும் அந்தப் பெண் மிகவும் அமைதியானவர் போலவும், குடும்பப் பாங்கானவர் போலவும் நடித்து அனைவரின் நம்பிக்கையையும் பெறுகிறார். பின்னர், அனைவரும் உறங்கும் நள்ளிரவு நேரத்தில் பீரோவில் உள்ள நகை மற்றும் ரொக்கப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தனது கூட்டாளிகளுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட யோகேஷ் ஷிண்டே அளித்த ஆதாரங்களின் அடிப்படையில், தற்போது தலைமறைவாக உள்ள அந்த ‘கில்லாடி’ பெண்ணைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ‘லூட்டேரி துல்ஹன்’ (கொள்ளையடிக்கும் மணமகள்) கும்பல், பல இளைஞர்களின் வாழ்க்கையையும் பணத்தையும் சீரழித்துள்ளது. இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும், சரியான விசாரணைக்குப் பிறகே திருமண முடிவுகளை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
