சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், 28-வது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் ‘குழந்தைகள் பாதுகாப்பு வலை’ பொருத்தப்பட்டுள்ளது. அந்த வலையின் வலிமையை நிரூபிப்பதற்காக, அங்கிருந்த ஒரு நபர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, 28-வது மாடியில் இருந்து நேரடியாக அந்த வலையின் மீது குதிக்கிறார். இதைப் பார்ப்பவர்களுக்கே நெஞ்சு படபடக்க வைக்கிறது.
அந்த நபர் வலையின் மீது குதித்தது மட்டுமின்றி, அதன் மீது ஏறி நடப்பது, குதிப்பது மற்றும் படுத்துக் காட்டுவது என ஆபத்தான சாகசங்களைச் செய்கிறார். அந்த வலை எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதைக் காண்பிப்பதே அவரது நோக்கமாக இருந்தாலும், ஒரு சிறிய தவறு நடந்திருந்தால் கூட அது உயிர்ச்சேதத்தில் முடிந்திருக்கும். இந்த “மரண விளையாட்டு” போன்ற செயல் காண்போரை அதிர வைத்துள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்களது கண்டனங்களையும் அதிர்ச்சியையும் பதிவு செய்து வருகின்றனர். “வலை எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், பாதுகாப்பு கயிறுகள் இன்றி இப்படிச் செய்வது முட்டாள்தனம்” என்றும், “இது பாதுகாப்பைச் சோதிக்கும் முறை அல்ல, மரணத்தை அழைக்கும் முறை” என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
