உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற ‘விவாஹ்’ திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்பூரின் காதம்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுக்கும், விகாஸ் என்பவருக்கும் மே 14, 2026 அன்று திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் மாலை மணமகள் வீட்டில் நடைபெற்ற ஹல்தி (மஞ்சள் நீர்) சடங்கின் போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் குழாயில் கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து நேர்ந்தது.
இந்தத் தீ விபத்தின் போது ஏற்பட்ட அலறல் மற்றும் பதற்றத்தில், அடுப்பில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணெய் சட்டி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் மணமகள் ஸ்வேதா உட்பட அங்கு குழுமியிருந்த 12 பேர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகினர். உடனடியாக அனைவரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், ஸ்வேதாவின் காயம் தீவிரமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் (Burn Ward) அனுமதிக்கப்பட்டார்.
இந்தத் துயரமான சூழ்நிலையிலும், மணமகன் விகாஸ் தனது திருமணத்தை ஒத்திவைக்க மறுத்து, எந்தச் சூழ்நிலையிலும் தனது மணமகளுக்குத் துணையாக நிற்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். இரு குடும்பத்தினரின் சம்மதம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியோடு, மருத்துவமனையின் தீக்காயப் பிரிவே தற்காலிக திருமண மேடையாக மாற்றப்பட்டது. அங்கு படுக்கையில் இருந்த ஸ்வேதாவிற்கு, விகாஸ் நெற்றியில் குங்குமம் இட்டு, மாலைகளை மாற்றி முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி, மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
