சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய ரக காரை உருவாக்கியுள்ளனர். பழைய மற்றும் தேவையற்ற பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அந்த வாகனம், சாலையில் இயங்கும் காட்சியைப் பார்த்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வியந்துப்போயுள்ளார். திறமை என்பது இடத்தைப் பொறுத்தது அல்ல, அது எங்கு வேண்டுமானாலும் முளைக்கும் என்பதை இந்த வீடியோ நிரூபிப்பதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவைப் பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர், அந்தச் சிறுவர்களின் படைப்பாற்றலை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். “வாய்ப்பு மட்டும் கிடைத்தால் போதும்” என்ற வாசகத்துடன், இந்தியாவின் குக்கிராமங்களில் ஒளிந்திருக்கும் அபரிமிதமான திறமைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முறையான வசதிகள் இல்லாத சூழலிலும், சொந்த முயற்சியால் ஒரு வாகனத்தையே உருவாக்கிய அந்தச் சிறுவர்களின் ஆர்வம் பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, இந்தியாவின் “ஜுகாட்” எனப்படும் சமயோசித புத்தி மற்றும் புதுமையான சிந்தனைக்குச் சான்றாக அமைந்துள்ளது. இந்தச் சிறுவர்களுக்கு முறையான பயிற்சியும், சரியான வழிகாட்டுதலும் கிடைத்தால் எதிர்காலத்தில் சிறந்த பொறியாளர்களாக உருவெடுப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சச்சின் போன்ற ஒரு உலகப்புகழ் பெற்ற வீரர் இதனைப் பாராட்டியிருப்பது அந்தச் சிறுவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
