ஜப்பானைச் சேர்ந்த நேமு குசானோ என்ற பெண், தனது கணவருக்கு 520 பெண்களுடன் திருமணத்தைத் தாண்டிய தொடர்பு இருந்ததை அறிந்து அவரிடமிருந்து பிரிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான சுபாவம் கொண்டவர் என நம்பித் திருமணம் செய்த நிலையில், ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் கணவனின் உண்மை முகம் அவருக்குத் தெரியவந்துள்ளது.
கணவரின் பையில் இருந்த மருந்துகள் மற்றும் கைப்பேசியில் வந்த அறிவிப்புகள் மூலம் சந்தேகமடைந்த குசானோ, தீவிரமாக விசாரித்தபோது இத்தனை பெண்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது உறுதியானது.
இவர்களின் மகனுக்கு அரிய வகை நோய் பாதிப்பு இருந்த சூழலிலும், கணவர் பொறுப்பின்றிச் செயல்பட்டது குசானோவை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபோது, அவரது கணவர் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒருவித உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
மகனின் எதிர்காலத்தைக் கருதி முதலில் அமைதி காத்த குசானோ, பின்னர் அவரிடமிருந்து பிரிந்து தனது குழந்தையைத் தனியாக வளர்த்து வருகிறார். தனது இந்த கசப்பான வாழ்க்கை அனுபவங்களை அவர் நகைச்சுவை கலந்த மங்கா சித்திரங்களாகவும், புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். உறவுகளில் நம்பிக்கை மற்றும் மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் புத்தகம் தற்போது உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
