பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ரகுநந்தன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் சவுத்ரி என்பவர், தனது மனைவி சுமன் குமாரியைத் திட்டமிட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத வயல்வெளிப் பகுதிக்குத் தனது மனைவியை அழைத்துச் சென்ற சந்தன், அங்கே தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்தக் கொலையைச் செய்த பின்னர், சந்தன் குமார் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் போலீசாருக்குத் தானே தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தனது மனைவியின் சடலத்தைக் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுது பெரும் நாடகமாடியுள்ளார். தனது குழந்தையை அருகில் வைத்துக்கொண்டு அவர் காட்டிய இந்த போலிப் பாசம், அங்கிருந்த மக்களை ஒரு நிமிடம் கலங்க வைத்தது. இருப்பினும், அவரின் நடத்தையில் போலீசாருக்குச் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.
போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அந்த ‘ட்விஸ்ட்’ வெளிப்பட்டது. தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்ததாகச் சந்தேகப்பட்ட சந்தன், அவரைத் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் சுமன் குமாரி தனது போக்கை மாற்றிக் கொள்ளாததால், ஆத்திரமடைந்த சந்தன் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுத் துப்பாக்கியை வாங்கியதை ஒப்புக்கொண்டார். ஊர் மக்கள் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துவிடலாம் என்ற அவரின் திட்டம் விசாரணையில் தோல்வியடைந்தது.
இறுதியாக, சந்தன் குமாரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். கைக்குழந்தையின் முன்னாலேயே தாயைச் சுட்டுக் கொன்ற இந்தக் கொடூரச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தன் குமார் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
