மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கண்டியூரைச் சேர்ந்த ஆதித்யன் என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், ஆதித்யன் வேலைக்குச் செல்லாமல் வேறொரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி தட்டிக்கேட்டபோது, நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன் என ஆதித்யன் ஆணவத்துடன் பதிலளித்ததாகத் தெரிகிறது.
இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் ஆதித்யன் ஆத்திரமடைந்து மனைவி மீது டீசலை ஊற்றித் தீ வைத்துள்ளார். உடல் கருகிய நிலையில் வலியால் துடித்த பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது 70 சதவீத தீக்காயங்களுடன் அவர் உயிருக்குப் போராடி வரும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதித்யனைச் சிறையில் அடைத்தனர். குடும்பப் பிரச்சனையில் கணவனே மனைவியைக் கொல்ல முயன்ற இந்த கொடூரச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
