மகாராஷ்டிராவின் துலே மாவட்டம் சக்ரி பகுதியில், சனி அமாவாசை இரவன்று (மே 17) நடந்த கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 25 வயதான ஜெயஸ்ரீ ககுஸ்தே மற்றும் அவரது நண்பர் அக்ஷய் சோனாவானே ஆகிய இருவரும், யோகேஷ் கைர்னார் என்ற போலி சாமியாரின் ஆசிரமத்திற்குப் பூஜைக்காகச் சென்றுள்ளனர். அங்கு பூஜை முடிந்ததும் ஜெயஸ்ரீயை வீட்டில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்தப் போலி சாமியார், அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார். அதற்கு ஜெயஸ்ரீ சத்தமிட்டு பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சாமியார் அவரைத் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை டெம்பே-வர்தானே பகுதியில் வீசியுள்ளார்.
இந்தக் கொடூரக் கொலையைத் தொடர்ந்து, தன்னுடனேயே இருந்த அக்ஷய் சோனாவானே இந்தத் தீய செயலை வெளியே சொல்லி விடுவாரோ என்ற அச்சம் போலி சாமியாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாட்சியை மறைப்பதற்காக அக்ஷயையும் இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அக்ஷயின் உடலை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, ஆசிரமத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ரகசியமாகப் புதைத்துள்ளார். சம்பவ இடத்தில் மாட்டு வண்டியின் சக்கரத் தடயங்கள் இருந்ததை அடுத்தகட்ட விசாரணையின் போது காவல்துறையினர் கண்டறிந்தனர்.
காட்டுப் பகுதியில் அக்ஷயின் உடலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஆரஞ்சு நிறக் கைக்குட்டைதான் இந்த மர்ம வழக்கின் சுருள அவிழ்க்க முக்கியக் காரணமாக அமைந்தது. மோப்ப நாய்கள் அந்தக் கைக்குட்டையை மோப்பம் பிடித்து, நேராக யோகேஷ் கைர்னாரின் ஆசிரமத்திற்கே போலீசாரை அழைத்துச் சென்றன. இதனைத் தொடர்ந்து, நிஜாம்பூர் போலீசார் போலி சாமியாரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தனது இரட்டைக் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
