ஷாக்… போன் பேசிட்டே போனவருக்கு நேர்ந்த கொடூரம்…! திறந்திருந்த மேன்ஹோலுக்குள் விழுந்து பலி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

By Swetha on ஆடி 3, 2026

Spread the love

மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக் (55) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்த கைரானி சாலையில், பாதுகாப்பு வலை அமைப்பதற்காக ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேன்ஹோல் மூடியைத் திறந்து வைத்திருந்தனர். அப்போது அலைபேசியில் பேசியபடி நடந்து வந்த அஸ்லாம், தடுப்பு வேலிகள் எதுவும் இல்லாததால் எதிர்பாராதவிதமாக அதில் விழுந்து, நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டார். தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை மீட்டனர்.

இந்தக் கொடூரமான அலட்சியத்தைத் தொடர்ந்து, பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஷ்வினி பைடே, சம்பந்தப்பட்ட வார்டின் உதவி ஆணையர் தனஜி ஹெர்லேகர் உள்ளிட்ட நான்கு மூத்த அதிகாரிகளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக அந்தப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் கறுப்புப் பட்டியலில் (Blacklisted) சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அலட்சியம் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உயர் மட்ட விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

   

இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநில சட்டசபையிலும் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த மரணம் “நெருக்கடியான அலட்சியத்தால் ஏற்பட்ட கொலைக்கு” சமம் என்று சபாநாயகர் ராகுல் நர்வேகர் கண்டனம் தெரிவித்தார். இதற்கிடையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி சார்பில் ரூ 10 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 8 நாட்களுக்குள் மும்பை முழுவதும் உள்ள அனைத்து மேன்ஹோல்களையும் 100% ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.