தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு தங்களுக்குத் தேவையான மின்னணு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாஷிங் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற பொருட்களை இல்லத்தரசிகளே தேர்வு செய்து வாங்கிக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தைப் போடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ. 2,000 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் திமுக தனது வாக்குறுதிகளாக முன்வைத்துள்ளது.
