“நானும் கொல்லப்படலாம்…!” – ஈரான் கொலை பட்டியலில்… நான்தான் முதல் குறி… நேட்டோ மாநாட்டில் டிரம்ப் வெளியிட்ட அதிரடி வாக்குமூலம்…!!

By Swetha on ஆடி 9, 2026

Spread the love

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ‘கொலை பட்டியலில்’ தான் முதன்மையான இலக்காக இருப்பதாகவும், ஒருவேளை தான் கொல்லப்படலாம் என்றும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் குண்டுவீச்சு நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசிய அவர், அந்நாட்டின் புதிய இஸ்லாமிய ஆட்சிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும், கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் குப்பையைப் போல செயல்பட்டு வருவதாகவும், உலகிற்குச் சரியானதைச் செய்வதாலேயே தான் அவர்களின் இலக்காக மாறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த கொலைப் பட்டியல் குறித்த எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், நேட்டோ மாநாட்டை முடித்துக்கொண்டு டிரம்ப் வாஷிங்டன் திரும்பும்போது பாதுகாப்பு காரணங்களுக்காகப் பல மர்மமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அமெரிக்க உளவு அமைப்பான ‘சீக்ரெட் சர்வீஸ்’ விடுத்த கோரிக்கையின் பேரில், கடைசி நேரத்தில் அவர் புதிய விமானத்திற்குப் பதிலாக பழைய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் பயணம் செய்தார். துருக்கி நாடு ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால் இந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், டிரம்ப் பயணித்த பழைய விமானம் புறப்படும்போது பத்திரிகையாளர்கள் பிரிவில் இருந்த ஜன்னல் திரைகளை முழுமையாக மூடி வைக்குமாறு கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

   

டிரம்ப் தவிர்த்த அந்த புதிய ‘போயிங் 747-8’ விமானத்தைக் கடந்த ஆண்டு கத்தார் அரச குடும்பத்தினர் அவருக்குப் பரிசாக வழங்கியிருந்தனர். ஆனால், அவசர அவசரமாக வடிவமைக்கப்பட்ட அந்தப் புதிய விமானத்தில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பழைய விமானத்தில் உள்ளதைப் போன்ற ஏவுகணைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்னும் முழுமையாக இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது ஒருபுறமிருக்க, வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பல மில்லியன் டாலர் மதிப்புள்ள விமானத்தைப் பரிசாகப் பெற்றதற்காக, டிரம்ப் ஏற்கனவே கடுமையான அரசியலமைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த எதிர்ப்புகளையும் அமெரிக்காவில் எதிர்கொண்டு வருகிறார்.