“அவருக்கு என்ன அதிகப் பிரசங்கித்தனமா?”.. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்து வாங்கிய பெ. சண்முகம்.. விஜய் கூட்டணியில் வெடித்த முதல் மோதல்..!!

By Muthu Mani on ஆனி 5, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) எம்.பி. இடத்தை காங்கிரஸ் கட்சிக்குத் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) விட்டுக்கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்பதவிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் (X) தள பக்கத்தில், த.வெ.க., காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரிகள் உள்ளடங்கிய “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின்” முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பெருமையாகவும், பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

பிரவீன் சக்கரவர்த்தியின் இந்தப் பதிவு புதிய கூட்டணியின் பங்காளிகளாகக் கருதப்பட்ட இடதுசாரி வட்டாரத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் மிகக் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய கூட்டணியின் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறி, அந்தப் பட்டியலில் சிபிஐ(எம்) கட்சியின் பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது என்று அவர் கொந்தளித்துள்ளார்.

   

மேலும் தனது பதிவில் விளக்கியுள்ள சண்முகம், “இப்படி ஒரு புதிய கூட்டணி அமைப்பது குறித்தோ அல்லது இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்பது குறித்தோ யாரும் எங்களை இதுவரை அணுகவும் இல்லை, எங்களோடு ஆலோசிக்கவும் இல்லை. த.வெ.க. ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் வெளியே இருந்து ஆதரவு கொடுத்துள்ளது என்பது ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது. இதையெல்லாம் மீறி எங்களைக் கேட்காமல் எங்களது பெயரைப் பயன்படுத்திய பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் இந்த எக்ஸ் பதிவை ‘அதிகப் பிரசங்கித்தனம்’ என்றுதான் சொல்ல வேண்டும்” என மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரின் ஒற்றைப் பதிவால் புதிய கூட்டணிக்குள் வெடித்துள்ள இந்த மோதல் தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.