தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் தகவல்களுக்கு அந்தந்தக் குழுக்களின் அட்மின்களே முழுப்பொறுப்பு எனத் தேர்தல் ஆணையம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் ஏதேனும் பதிவுகள் இடப்பட்டால், சம்பந்தப்பட்ட அட்மின்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு வாகனங்களைத் தனிப்பட்ட பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், தனியார் சுவர்களில் அனுமதி இன்றி விளம்பரம் செய்யக்கூடாது என்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் ‘சி-விஜில்’ (C-Vigil) செயலி அல்லது 1950 என்ற உதவி எண் மூலம் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இப்புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க மாநிலம் முழுவதும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் ஹெலிபேட் வசதிகளைப் பெற ‘சுவிதா’ (SUVIDHA) இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இது ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
