இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை விட்டுப் பிரியாமல் நான்கு நாட்களாகக் காவல் காத்த நாய் ஒன்றின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாயமான விக்சித் ராணா மற்றும் பியூஷ் ஆகிய இரு இளைஞர்களைத் தேடிச் சென்ற மீட்புக் குழுவினர், உறைபனியில் பியூஷின் உடல் கிடந்த இடத்தைக் கண்டறிந்தனர். அங்கு உணவு மற்றும் தண்ணீர் ஏதுமின்றி, சுற்றிலும் வீசிய கடும் பனிப்புயலையும் பொருட்படுத்தாமல் அவரது வளர்ப்பு நாய் அங்கேயே அமர்ந்து விசுவாசத்துடன் காவல் காத்து வந்துள்ளது.
மீட்புப் படையினர் உடலை எடுக்க முயன்றபோது, அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் எனக் கருதிய அந்த பிட்புல் நாய் அவர்களை ஆக்ரோஷமாகத் தடுத்தது. பின்னர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த நாய் சமாதானமடைந்து வழிவிட்ட பின்னரே சடலங்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க முடிந்தது. காட்டு விலங்குகளிடமிருந்து தனது எஜமானரின் உடலைப் பாதுகாத்து நின்ற அந்த நாயின் அபாரமான பாசமும், விசுவாசமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் கலங்கச் செய்துள்ளது.
