கடந்த ஜனவரி 30 அன்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவன விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜா, விவாதத்தின் இடையே திடீரென மயங்கி விழுந்தார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் உண்டானது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக (Stable) உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மயங்கி விழுந்த தருணத்தில், அங்கிருந்த திமுக செய்தித் தொடர்பாளர் மருத்துவர் எஸ்.ஏ.எஸ். ஹபிசுல்லாஹ், எச்.ராஜாவுக்குத் தேவையான அவசர முதலுதவிகளை வழங்கினார். குறிப்பாக, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் முக்கியமான நேரத்திற்குள் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி, உரிய மருத்துவ வழிகாட்டுதல்களை வழங்கினார். அதே நிகழ்வில் இருந்த பாஜக மூத்த தலைவரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜனும் எச்.ராஜாவுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவினார்.
