அண்ணா பல்கலைக்கழக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த திமுக அனுதாபி ஞானசேகரன், திடீரென அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “யார் அந்த SIR?” என்ற உண்மை வெளிவராமல் இருக்க ஏற்கனவே அவசர கதியில் இந்த வழக்கு முடிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதை உணர்ந்துள்ள திமுக அரசு, ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் செயல்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுவதாக அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தபடி, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த வழக்கு மீண்டும் முறையாக விசாரிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது காபந்து அரசாக இருக்கும் நிலையிலேயே இந்த வழக்கின் போக்கை மாற்ற திமுக அரசு முயல்வதாக அதிமுக சந்தேகம் எழுப்பியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு முதல்வர் ஸ்டாலினும், ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட திமுக அமைச்சரும்தான் முழுப் பொறுப்பு என அறிக்கையில் சாடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் ஏதேனும் “சித்துவேலைகள்” செய்து வழக்கைத் திசைதிருப்ப திமுக முயன்றால், அதற்கான விளைவுகள் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு மிகவும் கடுமையாக இருக்கும் என அதிமுக எச்சரித்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்குப் பின் உண்மைகள் வெளிவரும் என்பதால், பதற்றத்தில் ஆதாரங்களைச் சிதைக்க வேண்டாம் என்றும் அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், இந்த ‘SIR’ விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
