கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாமனாரை மருமகளே கூலிப்படை வைத்துத் தீ வைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி ராஜேந்திரன் (60). இவரது மகன் உயிரிழந்த நிலையில், மருமகள் ஜெயப்பிரியா அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை ராஜேந்திரன் கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று (ஜனவரி 29) ராஜேந்திரன் சாலையில் நடந்து சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பினர். உடலில் நெருப்பு பற்றி எரிந்த நிலையிலும் அவர் சாலையில் ஓடிய காட்சி காண்போரை உறைய வைத்தது. தற்போது 70% தீக்காயங்களுடன் அவர் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாகப் பண்ருட்டி போலீசார் நடத்திய விசாரணையில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரைத் தீர்த்துக்கட்ட ஜெயப்பிரியா தனது நண்பர்களுடன் சேர்ந்து இச்சதித்திட்டத்தைத் தீட்டியது உறுதியானது. இதையடுத்து ஜெயப்பிரியா மற்றும் அவருக்கு உதவிய 4 பேரை போலீசார் இன்று (ஜனவரி 30, 2026) கைது செய்துள்ளனர்.
