திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப் பகுதியில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், சொத்து தகராறு காரணமாக தந்தையை அவரது மகளும் மருமகனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சின்னகாளி (45), தனது மகள் கீதா மற்றும் மருமகன் சிதம்பரத்துடன் வசித்து வந்துள்ளார். சின்னகாளிக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்ட மருமகனும் மகளும், அதற்கு அவர் சம்மதிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்துள்ளனர்.
இதனால் திட்டமிட்டபடி, அவர்கள் சின்னகாளியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், விசாரணையை மேற்கொண்டு, கொலைக்கு உடந்தையான மகள் கீதா மற்றும் மருமகன் சிதம்பரம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
