ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சுமத்தியுள்ள புகார்கள் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் பேரில், சென்னை காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த ஜாய், அக்குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலம் நிரூபிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனக்கு எதிராக அவதூறு பரப்பத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. காவல்துறையின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ரங்கராஜின் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவருக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
