21 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கிய விஜயகாந்த்.. கடைசியில் அந்த இடம் யாருக்கு போய் சேர்ந்தது தெரியுமா..?

By Sumathi

Updated on:

நடிகர் விஜயகாந்த் காலமாகி, ஒரு வாரம் கடந்துவிட்டது. ஆனால் அவரை பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்கள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. வலது கை உதவி செய்வது, இடது கைக்கு கூட தெரியக்கூடாது என்பார்கள். அந்த வகையில், விஜயகாந்த் செய்த பல மாபெரும் உன்னத உதவிகள் குறித்த விவரங்கள் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகின்றன. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மனிதர்கள் மீது அளவற்ற அன்பு காட்டுபவர். அவரிடம் ஜாதி, மதம், இனம் என்ற வேறுபாடும் கிடையாது. அதனால் நரிக்குறவர் இன மக்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை பார்க்க ஆசைப்பட்டு வந்தால், அவர்களை அருகில் அழைத்து அவர்கள் தோள் மீது கை போட்டு புகைப்படம் எடுத்து கொடுத்து விடுவார்.

   

அதனால்தான், அவர்களுக்காகவே, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்ற பாடல்காட்சியில் ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் நரிக்குறவர் வேஷமிட்டு ஆடியதாகவும் கூறுவார்கள். அதே போல், அந்த நரிக்குறவர் இன மக்கள் மீது, மறைந்த கேப்டன் விஜயகாந்தும் நிறைய அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார். எம்ஜிஆர் பாணியில்தான் அவரும் அந்த மக்கள் மீது பாசம் காட்டினார். எப்போதும் ஊர் ஊராக நாடோடிகளாக செல்லும் அவர்கள் மரத்தடி நிழல்களில் வாழ்வதை பார்த்து அவர்கள் மீது பரிதாபப்பட்ட விஜயகாந்த், அவர்களுக்கு ஏதேனும் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

இதையடுத்து 7 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் நரிக்குறவர் இன மக்கள் வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால், பல ஆண்டுகளுக்கு பிறகு, தான் இல்லாத போது அந்த நிலத்தை தனது வாரிசுகளோ, சொந்தங்களோ உரிமை கொண்டாடி அந்த நிலத்தை அவர்களிடம் இருந்து பறித்துவிடக் கூடாது என சிந்தித்த கேப்டன், அதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்திருக்கிறார். அதாவது தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை அரசிடம் ஒப்படைத்து, அந்த நிலத்தை அரசே, நரிக்குறவர் இன மக்களுக்கு வழங்குவது போல ஏற்பாடு செய்திருக்கிறார்.

அப்படி செய்தால், அந்த நிலத்தை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இப்போது அந்த 7 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ. 21 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்ற நிலையில், ஒரு சாதாரண நடிகராக இருக்கும்போதே இந்த நற்செயலை செய்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் என்னும் அந்த மாமனிதர். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன், ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

author avatar
Sumathi