தாய்லாந்து டு இலங்கை.. தொழிலதிபரின் ‘சொகுசு’ ஆசை வலை… 110 கோடி டீலில் சிக்கிய 22 துறவிகள்… சினிமா பாணியிலான மெகா மோசடி…!!!

By Muthu Mani on சித்திரை 27, 2026

Spread the love

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை திரும்பிய 22 புத்த துறவிகள், சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்தி வந்த சம்பவம் அந்நாட்டையே அதிரவைத்துள்ளது. கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், துறவிகள் கொண்டு வந்த பார்சல்களில் மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் இனிப்புகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 112 கிலோ ‘குஷ்’ மற்றும் ‘ஐஸ்’ வகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆன்மீக உடையில் வந்தவர்களே இவ்வளவு பெரிய அளவில் கடத்தலில் ஈடுபட்டது அதிகாரிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விசாரணையில், கைதானவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் துறவிகள் என்பது தெரியவந்துள்ளது. கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் தலைவர், முகநூல் (Facebook) வழியாக இவர்களைத் தொடர்பு கொண்டு, இலவச தாய்லாந்து சுற்றுலா மற்றும் சொகுசு வசதிகள் தருவதாக ஆசை காட்டி மூளைச்சலவை செய்துள்ளார். பாங்காக்கில் துறவி ஆடையைக் களைந்துவிட்டு சாதாரண உடையில் உல்லாசமாகச் சுற்றித் திரிந்த இவர்கள், மாணவர்களுக்கான உதவிப் பொருட்கள் என நம்பியே இந்தப் பார்சல்களை எடுத்து வந்ததாகக் கூறினாலும், இவர்களின் திட்டமிட்ட செயல்பாடுகள் குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
புத்த மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் நடந்த இந்தச் செயலுக்கு இலங்கை மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைதான 22 துறவிகளும் தற்போது நீதிமன்ற உத்தரவின்படி மே மாதம் 2-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் தவறான பாதையில் சென்ற இந்த இளைஞர்களின் செயல் அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பலைப் பிடிக்கப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.